எழுந்து வா! பாலு... விரைந்து வா! - தயாரிப்பாளர் தாணு

எழுந்து வா! பாலு... விரைந்து வா! - தயாரிப்பாளர் தாணு
Updated on
1 min read

எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி, தயாரிப்பாளர் தாணு கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் பூரண நலம்பெற வேண்டி இன்று (ஆகஸ்ட் 20) மாலை கூட்டுப் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாரதிராஜா, இதில் ரஜினி, கமல், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், பல்வேறு பிரபலங்கள் எஸ்.பி.பி பூரண நலம்பெற வேண்டி அறிக்கைகள், வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் தயாரிப்பாளர் தாணு கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அது பின்வருமாறு:

வானுதிர்த்த கதிராக
நெல்லூரில்
வந்துதிர்த்த இசையே!

குழல் இனிதா?
யாழ் இனிதா? என்றால்
நின் குரலே
இனிதென்பேன்.

முக்கனி சாறெடுத்து
கொம்புத் தேனில்
முகிழ்த்தெடுத்த
அருஞ்சுவைக்கு
மேலானது
நின் குரலே
சுவையென்பேன்.

அங்கிங்கெனாதபடி
எங்கும்
நின் குரல் கேட்க
எட்டுத் திக்கும்
எதிரொலிக்க
எழுந்து வா! பாலு
விரைந்து வா!

இன்னிசை
பண்ணிசை
நல்லிசை
அழைக்கிறது
எழுந்து வா! பாலு
விரைந்து வா!

தேனிசைத் தென்றலும்
ஏழிசை சுரங்களும்
நின் வரவுக்காக
காத்திருக்க
எழுந்து வா! பாலு
விரைந்து வா!

ஆம்..
பாரதிராஜா வேண்டியபடி
அகிலம்
ஆண்டவனை
பிரார்த்திக்க
நீ..வருவாய்!
திருவாய் மலர்வாய்!..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in