சீக்கிரம் குணமடைந்து வந்துருங்க பாலு சார்: சத்யராஜ்

சீக்கிரம் குணமடைந்து வந்துருங்க பாலு சார்: சத்யராஜ்
Updated on
1 min read

சீக்கிரம் குணமடைந்து வந்துருங்க பாலு சார் என்று சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடம்பு ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

எஸ்.பி.பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் பூரண நலம்பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"எஸ்.பி.பி சார், உலகம் முழுக்க வாழ்கிற கோடிக்கணக்கான மக்களுடைய மகிழ்ச்சிக்கு உங்களுடைய குரல் முக்கியமான காரணம். அந்தக் குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 படத்தில் வில்லனாக நடித்த நான், 100 படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறேன் என்றால் அதற்குப் பல முக்கியமான காரணம் இருக்கிறது. அதில் உங்களுடைய குரல்வளம் மிக முக்கியமான காரணமாகக் கருதுகிறேன்.

'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', 'கொடியிலே மல்லிகைப்பூ', 'ஆண்டவனப் பார்க்கணும்' எனச் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் பூரணமாகக் குணமடைந்து வர வேண்டுமென்று பொதுநலத்துடன் வாழ்த்துறேன், சுயநலத்துடன் வாழ்த்துறேன். சீக்கிரம் குணமடைந்து வந்துருங்க பாலு சார்"

இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in