

‘ரோஜா’ படம் தொடங்கி தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் இசையமைத்து வருபவர் ஏ.ஆர். ரஹ்மான். இது தவிர பல்வேறு ஹாலிவுட் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து வருகிறார்.
மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று (24.07.20) வெளியாகியுள்ள ‘தில் பெச்சாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் தன்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்தி செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.
‘தில் பெச்சாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள். அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள்.
பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.