

தங்களுடைய சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் எப்போது என்பதை விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை. சில சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மீண்டும் சீரியல் படப்பிடிப்பு தடைப்பட்டது.
ஜூலை 8-ம் தேதி முதல் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டது. இதில் பல முன்னணி சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களுக்காக பழைய சீரியல்களே ஒளிபரப்பாகி வந்த நிலையில், சீரியல்களின் புதிய அத்தியயாங்கள் விரைவில் தொடங்க அனைத்து தொலைக்காட்சியுமே ஆயத்தமாகி வந்தது.
தற்போது விஜய் டிவி தங்களுடைய சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் அனைத்துமே ஜூலை 27-ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் டிவி தங்களுடைய ட்விட்டர் பதிவில் "ரிப்பீட் எல்லாம் ஸ்டாப்பு. ஒரிஜினல் இப்போ ஸ்டாட்டு" என்ற தலைப்புடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் 'ஆயுத எழுத்து', 'மெளன ராகம்', 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாரதி கண்ணம்மா', 'தேன்மொழி', 'காற்றின் மொழி', 'பாக்கியலட்சுமி' உள்ளிட்ட தங்களுடைய மெகா தொடர்கள் அனைத்துமே ஜூலை 27-ம் தேதி ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.