மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை: விஜய் சேதுபதி

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை: விஜய் சேதுபதி

Published on

மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்த படப்பிடிப்புமே இல்லாமல் நடிகர்கள் வீடுகளிலேயே குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள். இந்தக் கரோனா ஊரடங்கில் கமலுடன் நேரலையில் உரையாடியது, ரசிகர் மன்றப் பணிகள், கதைகள் படிப்பது, கதை விவாதம், குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுவது என தன் பொழுதைக் கழித்து வருகிறார் விஜய் சேதுபதி.

சில மாதங்களுக்கு வரை தனது சமூக வலைதளங்களில், பிரச்சினைகளுக்குக் கருத்துச் சொல்லி வந்தார். ஆனால், இப்போது பேட்டிகளில் மட்டுமே தனது கருத்தைப் பதிவு செய்து வருகிறார். இதனிடையே அனைத்து விஷயங்களுக்கும் கருத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் சேதுபதி நேரலைப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

"ஏதேனும் ஒரு கருத்துச் சொன்னால் அதற்கு எதிர்ப்பு, ஆதரவு என்று இரண்டு தரப்பினர் இருப்பார்கள். அது சமூகத்தில் ரொம்பவே சகஜம். கருத்துச் சொல்லும் அனைவருக்குமே பதில் சொல்லிக் கொண்டே இருக்கவும் முடியாது. கருத்துச் சொல்லி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் எண்ணம் எனக்குக் கிடையாது.

அதேபோல் யாரையும் புண்படுத்தும் எண்ணமும் கிடையாது. ஏனென்றால் என் வேலை அதுவல்ல. யாருடைய வெறுப்பையும் சம்பாதித்து எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை. எனக்குச் சில விஷயங்கள் சரி என்று தோன்றுகிறது, சொல்கிறேன்.

ஒரு நடிகராக இருப்பதால் அனைத்து விஷயங்களுக்கும் கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்து மட்டும் சொல்லிவிட்டு, ஓரமாகப் போய்விட முடியாது. வெறும் கருத்து மட்டும் சொல்லிவிட்டுப் போவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. என் கருத்தைச் சொல்கிறேன், இன்னொருவர் அவருடைய கருத்தைச் சொல்கிறார்".

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in