கால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு

கால் சிகிச்சைக்குப் பின் நடித்த அனுபவம்: மஞ்சிமா மோகன் பகிர்வு
Updated on
1 min read

கால் சிகிச்சைக்குப் பின் 'துக்ளக் தர்பார்' படத்தில் நடித்த அனுபவம் குறித்து மஞ்சிமா மோகன் பகிர்ந்துள்ளார்.

'தேவராட்டம்' படத்தில் நடித்து முடிந்தவுடன் மஞ்சிமா மோகனுக்குக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், சில காலம் படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தார். தற்போது சிகிச்சையில் முழுமையாக குணமாகி 'எஃப்.ஐ.ஆர்' மற்றும் 'துக்ளக் தர்பார்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் 'துக்ளக் தர்பார்' படத்தில் விஜய் சேதுபதிக்குத் தங்கையாக நடித்து வருகிறார் மஞ்சிமா மோகன். இந்தப் படத்தில்தான் கால் சிகிச்சைக்குப் பின் முதலில் நடித்துள்ளார்.

இது தொடர்பாக மஞ்சிமா மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இதுதான் 'துக்ளக் தர்பார்' படத்துக்காக நான் நடித்த முதல் சீன். நான் நடக்க மிகவும் சிரமப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. (அப்போதுதான் எனக்கு சர்ஜரி முடிந்திருந்தது, நான் எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தேன்). எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நான் இதற்கு முன் நடித்ததில்லை. படப்பிடிப்புத் தளத்துக்கு நான் வந்ததும் இயக்குநர் டில்லி சார் என்னிடம் வந்து காட்சியை விளக்கினார்.

நான் நடக்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் எப்படி சிரமமில்லாமல் நடப்பதில் கவனம் செலுத்திக் கொண்டே அவர் என்னிடம் கேட்ட உணர்ச்சிகளைக் கொண்டு வரமுடியும்? நான் என்னுடைய கவலையை அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் என்னால் முடிந்தவரை நடிக்குமாறும் எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம் என்றும் கூறினார். நானும் அப்படியே செய்தேன். சில நேரங்களில் நாம் முயற்சி செய்யாமலேயே நம்மால் சில விஷயங்களைச் செய்ய இயலாது என்று நாம் நினைத்து விடுகிறோம்".

இவ்வாறு மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in