Published : 27 Jun 2020 08:31 PM
Last Updated : 27 Jun 2020 08:31 PM

அஜித்தைப் பாராட்டிய கர்நாடகா துணை முதல்வர்

அஜித்தின் பணிகளைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார் கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண்.

கடந்த ஆண்டு சென்னை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் உள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்‌ஷா குழுவின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித். அதன் மூலம் ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவினார். அஜித்தின் வழிகாட்டுதலில் 'தக்‌ஷா' அணியின் ட்ரோன் (ஆளில்லா விமானம்) நீண்ட நேரம் வெற்றிகரமாகப் பறந்து சாதனை படைத்தது. மேலும் பெங்களூருவில் நடந்த ட்ரோன் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்துகொண்டு பரிசுகள் வென்றது.

தற்போது இந்த தக்‌ஷா அணியின் உதவியுடன் தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமுள்ள சிவப்பு மண்டலங்களில் ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. இந்தப் பணியில் தொடர்புடைய டாக்டர் கார்த்திக் நாராயண் இந்தத் தகவலை, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

இதனிடையே இந்தப் பணியை கர்நாடகாவிலும் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயண் கூறியிருப்பதாவது:

"கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்த, பெரிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க, கிருமிநாசினி ட்ரான் வழியாக ஒரு வழியை உருவாக்கியதற்கு, திரை நட்சத்திரம் அஜித்குமாரின் வழிகாட்டுதலில் செயல்பட்ட தக்‌ஷா அணியினருக்குப் பாராட்டுகள். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது"

இவ்வாறு அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x