போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவுரை

போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவுரை
Updated on
1 min read

போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இன்று (ஜூன் 26) உலகமெங்கும் 'சர்வதேச போதைப்பொருள் உபயோகம் மற்றும் கடத்தலுக்கு எதிரான நாள்' அனுசரிக்கப்பட்டு வருகிறது. போதைப் பொருட்களுக்கு எதிராகப் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள்.

தற்போது தமிழக அரசின் காவல்துறையினருடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ ஒன்றைத் தயாரித்து, அவருடைய யூ டியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டிய நாள். இன்றைய நிலையில் நம் எல்லோருக்கும் விழிப்புணர்வு அவசியம். இந்த கோவிட்-19 வைரஸ் தாக்குதலிலிருந்து விரைவில் மீண்டுவிடலாம். ஆனால், போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்டால் மீள்வது சிரமம்.

போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை. தீய எண்ணங்களையும், கெட்ட நடத்தைகளையும் உருவாக்கும். பலர் வாழ்க்கை அழிந்துவிடும். கொடூரக் குற்றங்கள், வன்கொடுமை, சிறுவர்களின் வாழ்க்கைச் சீரழிவு போன்ற பல்வேறு தீய செயல்கள் போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள். எனவே, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்போம், தடுப்போம். இளைய தலைமுறையைக் காப்பாற்றுவோம் என ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்வோம்".

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in