நடிகர் சங்கத் தேர்தலில் ஒரு புரட்சி ஆரம்பம்: பிரகாஷ்ராஜ் ஆவேசம்
‘நடிகர் சங்கத் தேர்தலில் ஒரு புரட்சி ஆரம்பிக்க இவ்வளவு ஆண்டு களாகியுள்ளது. மாற்றத்துக்கான தேவை ஏற்பட்டுள்ளது,’ என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்து்ளளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சேலம், நாமக்கல்லில் உள்ள நாடக நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்பதற்காக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பொன்வண்ணன், கருணாஸ், சரவணன், அஜய்ரத்னம், மனோ பாலா உள்ளிட்டவர்கள் நேற்று சேலம் வந்தனர். பின் சேலத்தில் உள்ள நாடக நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தினர். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் மற்றும் விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவு தரும்படி கோரினர்.
நடிகர் பிரகாஷ்ராஜ் கூறும் போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கு நாடக நடிகர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறோம். நாங்கள் யாரையும் குறை கூற வரவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும். நடிகர் சங்கத் தேர்தலில் உள்ளவர்களுக்கு பிரச்சினை வரும்போது தீர்வு காண வேண்டியது சங்கத்தின் கடமை. நடிகர் சரத்குமார் எனது நண்பர். ஆனால், அவர் தவறான இடத்தில் நின்று கொண்டுள்ளார்.
எதிரணியினர் அரசியல் மற்றும் சாதியைப் புகுத்துகின்றனர். கலைஞர்களுக்கு சாதி மத பாகுபாடு கிடையாது. நடிகர் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நடிகர் சங்கத் தேர்தலில் ஒரு புரட்சி ஆரம்பிக்க இவ்வளவு ஆண்டுகளாகியுள்ளது. மேலும் மாற்றத்துக்கான தேவை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு ஒற்றுமை இருக்காது என சரத்குமார் கூறுவது அநாகரிக பேச்சு. நமக்குள் ஒற்றுமை இல்லாமல் வாழ முடியாது. தலைமை பொறுப்பு களில் உள்ளவர்கள் பொறுப் பில்லாமல் பேசக்கூடாது. அதேபோல சங்க உறுப்பினர்களை பயமுறுத்தக்கூடாது.
நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உண்டு. இத்தனை ஆண்டுக்கு பின் இளைஞர்கள் கேள்வி கேட்கிறார்கள் என்றால் ஏதோ நடக்கிறது என்று தானே அர்த்தம். நான் யாருக்கும் பயப்படவில்லை. எனக்கு பதவி வேண்டாம். ஆனால், நடிகர் சங்கத்தில் தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். இந்த தேர்தல் நடிகர் சங்கத் தேர்தலை மாற்றக்கூடியது,’ என்றார்.
