'சார்லி' தமிழ் ரீமேக்கான 'மாறா' படப்பிடிப்பு நிறைவு

'சார்லி' தமிழ் ரீமேக்கான 'மாறா' படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

'சார்லி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'மாறா' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

2015ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் 'சார்லி'. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கினார். ஃபைண்டிங் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.

மலையாளத்தில் இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியாக பிரமோத் பிலிம்ஸ் இதன் ரீமேக் உரிமையை கைப்பற்றி, தமிழில் தயாரித்தது. துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் மாதவன், பார்வதி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா நாத் என ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் பாதியிலேயே நிற்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனை படக்குழு மறுத்துள்ளது. 'மாறா' படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலுக்கு முன்பே முழுமையாக முடித்துவிட்டதாகவும், இறுதிக்கட்டப் பணிகள் மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்கும் எனவும் பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு பாடல் வரிகளை தாமரையும், இசையமைப்பாளராக ஜிப்ரானும் பணிபுரிய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு விளம்பர படங்களை இயக்கிய திலீப் குமார், 'மாறா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in