'மாஸ்டர்' இடைவேளை காட்சி எப்படியிருக்கும்? - ரத்னகுமார் பதில்

'மாஸ்டர்' இடைவேளை காட்சி எப்படியிருக்கும்? - ரத்னகுமார் பதில்
Updated on
1 min read

'மாஸ்டர்' இடைவேளை காட்சி எப்படியிருக்கும் என்பதை இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. தமிழக அரசு இறுதிக்கட்டப் பணிகளுக்கு அனுமதி அளித்துள்ளதால், தற்போது 'மாஸ்டர்' பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பொன் பார்த்திபன் மற்றும் இயக்குநர் ரத்ன குமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதில் இயக்குநர் ரத்னகுமார் தீவிரமான விஜய் ரசிகர்.

கரோனா ஊரடங்கில் நேரலை பேட்டியொன்றில், 'மாஸ்டர்' படத்தின் இடைவேளை காட்சி எப்படியிருக்கும் என்று தெரிவித்துள்ளார் ரத்னகுமார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நேரடியாக பன்ச் வசனங்களாக இருக்கக் கூடிய படம் அல்ல 'மாஸ்டர்'. பொன் பார்த்திபனும் இது தொடர்பாக சொல்லியிருக்கிறார். விஜய் சார் பேசும் வசனங்கள் எது பன்ச் ஆக மாறும் என்று சொல்ல முடியாது. பன்ச் வசனமாக எழுதி அது எடுபடவில்லை என்றால் நாம் தான் வருத்தப்பட வேண்டும். விஜய் சாருடைய படங்களில் இடைவேளை காட்சி என்பது மாஸாக இருக்கும்.

'மாஸ்டர்' படத்தின் இடைவேளை காட்சியும் அப்படித்தான் இருக்கும். அந்தக் காட்சி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஒன்று இருக்கு. இதற்கு மேல் சொன்னால் படக்குழுவினர் அடிப்பார்கள். கண்டிப்பாக அந்தக் காட்சியில் விஜய் சார் பேசும் வசனத்துக்கு தியேட்டர் கிழியப் போகிறது. எனக்கும் அந்தக் காட்சி ரொம்பவே பிடித்திருந்தது"

இவ்வாறு இயக்குநர் ரத்ன குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in