'துருவ நட்சத்திரம்' எப்போது? அடுத்த படம் என்ன? - கெளதம் மேனன் பதில்

'துருவ நட்சத்திரம்' எப்போது? அடுத்த படம் என்ன? - கெளதம் மேனன் பதில்

Published on

'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீடு குறித்தும், தனது அடுத்த படம் குறித்தும் கெளதம் மேனன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்குப் பிறகு 'ஜோஷ்வா: இமை போல் காக்க' என்ற புதிய படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார் கெளதம் மேனன். அதில் பெரும்பாலான காட்சிகளை முடித்துவிட்டார். வெளிநாட்டில் படமாக்க வேண்டிய காட்சிகள் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது.

இந்தக் கரோனா ஊரடங்கில் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' கதையிலிருந்து ஒரே ஒரு காட்சியை மட்டும் எடுத்து 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தக் குறும்படத்தில் சிம்பு - த்ரிஷா இருவருமே அவர்களுடைய வீட்டிலிருந்தவாறு நடித்துக் கொடுத்துள்ளனர்.

இந்தக் குறும்படம் தொடர்பாக கெளதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் தனது அடுத்த படம் குறித்துப் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் எழுதியிருக்கும் சில திரைக்கதைகளுக்கு வெளிநாட்டுப் படப்பிடிப்பு அவசியம். இப்போதுள்ள சூழலில் அது சாத்தியமா என்பது தெரியவில்லை. எனவே அதை மாற்றலாமா என்று யோசித்து பின் அந்த யோசனையைக் கைவிட்டேன். சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் பேசி, இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அந்த நேரத்தில் வேறு கதைகளை யோசிக்கலாம் என்று சொன்னேன்.

உடனடியாக முடிக்க, 'ஜோஷ்வா இமைப்போல் காக்க' திரைப்படம் உள்ளது. அதன் படப்பிடிப்பு முடிய இன்னும் 10 நாட்கள் தேவை. அந்தப் படத் தயாரிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை. 'துருவ நட்சத்திரம்' இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் விக்ரமின் டப்பிங் நடக்கும். அந்தப் படம் கண்டிப்பாக பெரிய திரையரங்க வெளியீடாக இருக்கும். இந்த வருடக் கடைசிக்குள் அதை வெளியிட முயல்கிறோம். இந்த இரண்டு படங்கள்தான் அடுத்தடுத்து.

அதன்பின் சூர்யா மற்றும் கமல்ஹாசனுடன் மீண்டும் பணிபுரியும் வாய்ப்பு வந்துள்ளது. அதற்கான திரைக்கதை வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறேன்".

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in