திரௌபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்: சீனு ராமசாமி

திரௌபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்: சீனு ராமசாமி
Updated on
1 min read

திரௌபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல் என்று 'இடம் பொருள் ஏவல்' வெளியீடு குறித்து சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, நந்திதா, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'இடம் பொருள் ஏவல்'. லிங்குசாமி தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். 2014-ம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது.

2015-ம் ஆண்டு இந்தப் படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டது. அதற்குப் பிறகு லிங்குசாமிக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இந்தப் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, தற்போது லிங்குசாமி தனது பைனான்ஸ் பிரச்சினையிலிருந்து மீண்டு தனது படங்களின் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பிலிருந்த 'நான்தான் சிவா' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 'இடம் பொருள் ஏவல்' படத்தின் வெளியீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

'இடம் பொருள் ஏவல்' வெளியீடு குறித்து தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. தனது இயக்கத்தில் உருவான 'இடம் பொருள் ஏவல்' வெளியீடு பேச்சுவார்த்தை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி கூறியிருப்பதாவது:

''சூதர்மனைதனில் உருவப்படும் சேலையைப் பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்தி "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரௌபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படம் தான், ஆனால் எனக்குப் பிள்ளை. இயக்குநர் லிங்குசாமிக்கு நன்றி 'இடம் பொருள் ஏவல்' வெளியீடு''.

இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in