'ஜெயில்' வெளியீட்டில் ஒரு வெளிச்சக் கீற்று: இயக்குநர் வசந்தபாலன் தகவல்

'ஜெயில்' வெளியீட்டில் ஒரு வெளிச்சக் கீற்று: இயக்குநர் வசந்தபாலன் தகவல்
Updated on
1 min read

'ஜெயில்' வெளியீட்டில் ஒரு வெளிச்சக் கீற்று தெரிவதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஜெயில்'. ஜி.வி.பிரகாஷ், ராதிகா சரத்குமார், அபர்ணநதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீதரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

பல மாதங்களாகவே இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இறுதியாக வேல்ஸ் நிறுவனம் பார்த்துவிட்டதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகிவிடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே 'ஜெயில்' வெளியீடு தொடர்பாக இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'ஜெயில்' என்று பெயர் சூட்டியதால் என்னவோ ஜெயில் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது. எட்டுத் திசையெங்கும் தட்டினோம். குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம்.

இதற்கிடையில் கரோனா வேறு உலகை தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வருகிற செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன.

ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக் கீற்று தெரிகிறது. ஒரு மெல்லிய கயிறு இறக்கப்படுகிறது. விரைவில் ஜெயிலைப் பற்றிய நல்ல செய்தி காத்தோடு காத்தாக பரவும் என்ற நம்பிக்கையோடு இந்த நாளைத் திறக்கிறேன்".

இவ்வாறு இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in