

ஓடிடி மற்றும் திரையரங்க வெளியீடு தொடர்பாக அர்ச்சனா கல்பாத்தி பதிலளித்துள்ளார்.
கரோனா ஊரடங்கினால் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ள படங்களை ஓடிடி தளங்களுக்கு தயாரிப்பாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனால் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு மோதல் வெடித்துள்ளது. ஒருவரை மாற்றி ஒருவர் புகார் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வந்தனர்.
இதனிடையே, ஏஜிஎஸ் நிறுவனம் படங்களும் தயாரிக்கிறது, சொந்தமாக திரையரங்குகளையும் வைத்துள்ளது. ஆகையால், அவர்களுடைய கருத்தை அறிய பலரும் அர்ச்சனா கல்பாத்தியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.
அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது:
"ஓடிடி வெளியீடு vs திரையரங்க வெளியீடு குறித்து பலர் என்னிடம் கேட்கின்றனர். நான் எந்த பக்கமும் இல்லை. நாம் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை நான் நம்புகிறேன். இந்த புயலில் அனைவரும் தப்பிப் பிழைக்கவே முயற்சிக்கிறோம். எனவே ஒரே துறையாக நாம் நேர்மறையாகவும் ஒற்றுமையாகவும் இருப்போம்"
இவ்வாறு அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்