அஜித் படத்தைத் தவறவிட்ட தருணம்: பின்னணி கூறும் இயக்குநர் ராசி அழகப்பன்

அஜித் படத்தைத் தவறவிட்ட தருணம்: பின்னணி கூறும் இயக்குநர் ராசி அழகப்பன்
Updated on
2 min read

அஜித்துடனான நட்பு குறித்தும், தவறவிட்டட படம் குறித்தும் இயக்குநர் ராசி அழகப்பன் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கில் சமூக வலைதளத்தின் தாக்கம் அதிகமாகத் தொடங்கியுள்ளது. பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி தங்களுடைய நினைவுகளைப் பகிரத் தொடங்கியுள்ளனர்.

'வண்ணத்துப்பூச்சி' படத்தின் இயக்குநரும் கவிஞருமான ராசி அழகப்பன் புதிதாக யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதில் கமலுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம், பேச்சுவார்த்தை நடந்து கைவிடப்பட்ட படங்கள், நடிகர்களுடனான நட்பு உள்ளிட்டவை குறித்துப் பேசி பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அஜித்துடனான நட்பு, அவருடன் படம் பண்ண நடந்த பேச்சுவார்த்தை தொடர்பாக பேசி 'தல என்று மாறியது எப்படி?' என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"அஜித்தின் திரையுலக வாழ்க்கை ஆரம்பம் என்பது ரொம்ப சாதாரணமானதுதான். 1990களில் ஒரு சின்ன கேரக்டரில் தான் நடிக்கத் தொடங்கினார். எஸ்.பி.பி சார் தான் ஒரு நல்ல கதாபாத்திரம் வந்திருக்கு, நடிக்கிறியா என்று அஜித்திடம் கேட்டார். அவரும் சரி என்று சொல்ல, 'அமராவதி' படத்தில் நடித்தார். செல்வா தான் இயக்கினார். ஒரு நாளைக்கு 10 -15 காட்சிகள் படமாக்கியதாகச் சொல்வார்கள்.

எல்லோரிடமும் நன்றாகப் பழகுகிறார், ஒரு காட்சியைச் சொன்னால் உடனே பிடித்துக் கொண்டு நடித்துவிடுகிறார் என்று படக்குழுவினர் சொன்னார்கள். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் சாதாரணமாகத் தொடங்கிய ஒரு மனிதன், மெதுவாக வளர்கிறார். 'காதல் கோட்டை' படமெல்லாம் ரொம்பக் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். அந்தப் படம் தேசிய விருது வாங்கும் என யாருக்குமே தெரியாது. அந்த அளவுக்கு இருக்கும் வெளிச்சத்தில் ஒளிப்பதிவு செய்து படமாக்கினார் ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான்.

'முகவரி', 'வாலி' எனப் படிப்படியாக முன்னேறி இன்றைக்கு 'தல' ஆக போற்றப்படுகிறார். காரணம் என்னவென்றால், அவருடைய தன்னம்பிக்கை. அனைவருமே ஒரு பின்புலத்திலிருந்து வந்து நடித்து மேலே வருவார்கள். ஆனால், எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தனது மனஉறுதி தான் எழுச்சிக்குக் காரணம் என்று நடித்துக் காட்டியவர் அஜித். சமீபகாலத்தில் வேறு யாரையும் அப்படிச் சொல்லிவிட முடியாது. அதனால்தான் அவரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இது அஜித்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பலம்.

தன்னுடன் பணிபுரியும் அனைவருக்கும் சத்தமின்றி உதவிகள் செய்து வருபவர். கலைஞர் முன்பு ஒரு விழாவில் என்னை நிர்பந்தித்து அழைக்கிறார்கள் என்று அஜித் பேச, ரஜினியே கைதட்டினார். எதையும் எதிர்கொண்டு நிமிர்ந்து நின்று போராடிக் கூடிய குணம் அஜித்துக்கு உண்டு. நடிகர் சிவகுமாருக்குப் பிறகு ரசிகர் மன்றம் வேண்டாம், குடும்பத்துக்காகப் பாடுபடுங்கள் என்று சொல்லி ரசிகர் மன்றங்களைக் கலைத்தவர் அஜித்.

எனக்கும் சரணுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. சேத்துப்பட்டில் சரண் அலுவலகம் இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக நான் போயிருந்தேன். பயங்கரமான மழை. அப்போது திடீரென்று ஒரு பைக் வந்து நிற்கிறது. ஹெல்மெட்டைக் கழட்டிவிட்டு உள்ளே வருகிறார். யாரென்றால் அஜித். சரண் என்னை அறிமுகப்படுத்த, இருவரும் பேசத் தொடங்கினோம். ரொம்ப சாதாரணமாகப் பழகினார்.

பின்பு நான் கமலிடமிருந்து வெளியே வந்த பிறகு அஜித்தை வைத்துப் படம் பண்ணலாம் எனத் திட்டமிட்டேன். அவருடைய மேலாளரிடம் நேரம் கேட்டவுடன், வரச் சொல்லுங்கள் என்று சொன்னார் அஜித். அவர் வரச் சொன்ன நேரம் காலை 6 மணிக்கு. 6 மணிக்கா என்ற நம்பிக்கை இல்லாமல் 6:10 சென்றேன். காலையிலேயே குளித்து முடித்து எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

ஸாரி சார் என்றவுடன் ஏன் என்றார். "வருவீர்களோ, வர மாட்டிர்களோ என நினைத்தேன்" என்றேன். "சொன்னால் சொன்னபடி இருக்கணும். என்னிடமிருந்து ஒரு வார்த்தை வந்தது என்றால் அதுபடி நடப்பேன்" என்றார். கதையைச் சொன்னேன். உடனே விரிவாகக் கேட்க இன்னொரு நாள் அழைக்கிறேன் என்றார். அப்போது தொலைபேசி எல்லாம் கிடையாது பேஜர் தான். அஜித்தை சந்தித்துவிட்டு, நான் கிராமத்துக்குப் போய்விட்டேன். ஆனால், 3-வது நாளிலிருந்து சென்னையில் என்னைத் தேடியிருக்கிறார்கள். நான் கிடைக்கவில்லை என்றவுடன் அந்த வாய்ப்பு அப்படியே போய்விட்டது".

இவ்வாறு ராசி அழகப்பன் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in