ஓடிடி தளங்களைச் சாடியுள்ள 'சர்வர் சுந்தரம்' இயக்குநர் 

ஓடிடி தளங்களைச் சாடியுள்ள 'சர்வர் சுந்தரம்' இயக்குநர் 
Updated on
1 min read

ஓடிடி தளங்களுக்கு இன்னமும் கோலிவுட் என்றால் என்னவென்று புரியவில்லை என்று 'சர்வர் சுந்தரம்' இயக்குநர் ஆனந்த் பால்கி தெரிவித்துள்ளார்.

பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'சர்வர் சுந்தரம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் 2016-ம் ஆண்டே முடிந்துவிட்டன.

ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலால் பலமுறை இந்தப் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 31, பிப்ரவரி 14 என வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை.

சில நாட்களுக்கு முன்பு 'சர்வர் சுந்தரம்' வெளியீட்டுப் பிரச்சினை தொடர்பாக தனது வேதனையை பகிர்ந்திருந்தார் இயக்குநர் ஆனந்த் பால்கி. அதில் "'சர்வர் சுந்தரம்' படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா?" என்றும் கேட்டிருந்தார்.

இதனிடையே இன்று (மே 9) 'சர்வர் சுந்தரம்' டிஜிட்டல் வெளியீடு தொடர்பாக இயக்குநர் ஆனந்த் பால்கி தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:

"தமிழ் படங்கள் ஒழுங்காக மதிப்பிடப்படுகிறதா என்று தெரியவில்லை. ஓடிடி தளங்களுக்கு இன்னமும் கோலிவுட் என்றால் என்னவென்று புரியவில்லை. 'சர்வர் சுந்தரம்' திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது. சந்தானம் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி"

இவ்வாறு ஆனந்த் பால்கி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in