புரியவில்லையா தலைமைக்கு? டாஸ்மாக் திறப்பு தொடர்பாக கமல் காட்டம்

புரியவில்லையா தலைமைக்கு? டாஸ்மாக் திறப்பு தொடர்பாக கமல் காட்டம்
Updated on
1 min read

டாஸ்மாக் திறக்கப்படவுள்ளது தொடர்பாக கமல் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. தமிழகத்தில் கோயம்பேடு மார்க்கெட் மூலம் கரோனா பரவல் அதிகமாகியுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாகவே கரோனா தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கரோனா தொற்று அதிகரித்து வரும் சமயத்தில், டாஸ்மாக் திறப்பு அவசியம்தானா எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

டாஸ்மாக் திறக்கப்பட இருப்பது தொடர்பாக கமல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''கோயம்பேட்டைக் காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப்படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கைத் திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களைப் பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு".

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சென்னையில் கரோனா தொற்று அதிகமாக இருப்பதால், இங்கு மட்டும் டாஸ்மாக் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in