ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன்: பிரசன்னா உறுதி

ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன்: பிரசன்னா உறுதி
Updated on
1 min read

ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன் என்று பிரசன்னா உறுதிபடத் தெரிவித்தார்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகள் தமிழ்ப் பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து துல்கர் சல்மான் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கோரியிருந்தார். இதனிடையே அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் காட்சியையே நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

துல்கர் சல்மான் இந்தக் கடிதத்தை வெளியிட்டு, இதற்காக தனது குடும்பத்தினரையும் யாரும் இந்த அளவுக்குத் திட்டியிருக்க வேண்டாம் என்ற வருத்தத்தையும் பதிவு செய்தார். இதற்கு பிரசன்னா, ரம்யா உள்ளிட்ட சிலர் துல்கருக்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், பிரசன்னா ஒருபடி மேலே போய் துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கோரியிருந்தார்.

பிரசன்னாவின் இந்தக் கருத்தை வைத்து பலரும் அவரையும் திட்டத் தொடங்கினார்கள். ஆனால், பிரசன்னா இதற்குப் பதிலடி கொடுக்காமல் அமைதியாகவே இருந்தார். இதை வைத்துப் பலரும் பிரசன்னா ட்விட்டர் தளத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளார் எனக் கூறினர்.

இது தொடர்பாக பிரசன்னாவிடம் தொலைபேசியில் கேட்ட போது, "யாரோ ஒரு சிலர் நடந்துகொள்ளும் விஷயத்துக்காக நான் ட்விட்டரிலிருந்து விலகமாட்டேன். பலமுறை எனக்கு எவ்வளவோ அன்பும், ஆதரவும் ட்விட்டரில் கிடைத்துள்ளது" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in