

'மாஸ்டர்' படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருப்பதாக வெளியான செய்திக்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து வெளியீட்டுக்குத் தயாராக வைத்துள்ளது படக்குழு.
இன்னும் 20 நாட்கள் இறுதிக்கட்டப் பணிகள் இருப்பதாகவும், 'மாஸ்டர்' எப்போது வெளியானாலும் கொண்டாட்டம்தான் என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்தக் கரோனா ஊரடங்கில் 'மாஸ்டர்' படம் குறித்து பல வதந்திகள் வெளியாவதும், அதற்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
இன்று (ஏப்ரல் 29) காலை முதலே சமூக வலைதளத்தில், 'மாஸ்டர்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியானது. பலரும் போஸ்டர்களை ஒப்பிட்டு, இதுதான் இரண்டு விஜய்க்கும் உள்ள தோற்றங்கள் என்று பதிவிட்டனர்.
இது தொடர்பாகப் படக்குழுவினரிடம் விசாரித்தபோது, "இது மாதிரியான செய்திகளை எல்லாம் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்றே தெரியவில்லை. விஜய் ஒரே ஒரு கேரக்டரில்தான் நடித்துள்ளார். அந்தச் செய்தியில் உண்மையில்லை" என்று தெரிவித்தனர்.