

கரோனா ஊரடங்கினால் அவதியுறும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ்.
தமிழ் நடிகர்களில் முதன்மையாக 3 கோடி ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்தார் லாரன்ஸ். அதில் எந்த நிவாரணத்துக்கு எவ்வளவு என்ற பட்டியலையும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து தனியாக தூய்மைப் பணியாளர்களுக்கு 25 லட்ச ரூபாய், விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய், நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.
தற்போது கரோனா ஊரடங்கினால் அவதியுற்று வரும் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு முதற்கட்டமாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் 25 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார் லாரன்ஸ். இதற்கு இணையத்தில் பலரும் லாரன்ஸுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.