'இப்படி நன்றி கெட்டு வாழ்வதற்கு கரோனா வந்து சாவது மேல்!' - பேரரசு காட்டமான கவிதை

'இப்படி நன்றி கெட்டு வாழ்வதற்கு கரோனா வந்து சாவது மேல்!' - பேரரசு காட்டமான கவிதை
Updated on
1 min read

மருத்துவர் சைமனின் உடல் அடக்கத்தின்போது ஏற்பட்ட எதிர்ப்பு தொடர்பாக இயக்குநர் பேரரசு காட்டமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைப் பொதுமக்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனை தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 'மனித வைரஸ்' என்ற பெயரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார் இயக்குநர் பேரரசு.

அந்தக் கவிதை:

இறந்து
தெய்வமானவர்களை
அடக்கம் செய்ய,
இறக்காத
பிணங்கள்
மறுக்கின்றன!

மனசாட்சியைப்
புதைத்துவிட்டு
மருத்துவரைப்
புதைக்க,
மனித நோய்கள்
தடுக்கின்றன!

இதயத்தில்
தொற்றுநோய் உள்ளவன்
சொல்கிறான்
பிரேதத்தில்
தொற்று நோயென்று!

நன்றிகெட்ட
உன்னைவிட
நோய் பரப்பிய
சீனக்காரன்
சிறந்தவனே!

கோயில்
மூடப்பட்டுவிட்டது!
தெய்வங்கள்
அடைபட்டுவிட்டது!

இன்று
மருத்துவனே
நடமாடும் தெய்வம்!
அந்த தெய்வத்தையும்
கல்லாக்கி விடாதடா
கலிகால மனிதா!

இப்படி
நன்றிகெட்டு
வாழ்வதற்கு
கரோனா வந்து
சாவது மேல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in