

கரோனா அச்சுறுத்தலிலும் இடைவிடாது பணிபுரிந்து வருபவர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்துப் பா ஒன்றை எழுதியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்கவே மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் எந்தவொரு பணியும் நடைபெறாததால், பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவத் துறையினர், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் மட்டுமே இந்தத் தருணத்திலும் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தியத் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். தற்போது இயக்குநர் சீனு ராமசாமி இவர்களுக்காக ஒரு வாழ்த்துப்பா எழுதியிருக்கிறார்.
அந்த வாழ்த்துப் பா:
மக்களைக் காக்கும்
மக்களே
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும் மக்களே
வாழ்க என்றும் வாழ்கவே
சுமந்து பெற்றவள்
எங்கள் தாய்
இன்று உயிரை
காப்பவள் செவிலித்தாய்
விண்வெளி உடையணிந்தாய்
விரைந்து பணி செய்தாய்
மக்களைக் காக்கும் இவள்
புனிதத் தாய்
வாழ்க என்றும் வாழ்கவே
தன்னையே அர்ப்பணம்
செய்து
மருத்துவம் செய்யும்
மருத்துவரே
நீயும் ஓர் தாய்க்கு
மகனல்லவா
எம் பிள்ளைகள் வணங்கும்
உனையல்லவா...
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும்
மகேசனே
நெருப்பு வெயிலிலே
பொறுப்பாய் நிற்பவரே
முதலில் அன்பாய் சொன்னவரே
அறிந்து வருபவரை
அதிர விரட்டிக் காத்தவரே
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும் காவலரே
ஊரடங்கில் ஊரை
சுத்தம் செய்தவரே
நீல உடையில்
சாக்கடையைச் சரி செய்தவரே
நீங்கள் தொழிலாளியல்ல
தூய்மைத் தொண்டர்கள்
வாழ்க என்றும் வாழ்கவே
மக்களைக் காக்கும்
பெருந்தெய்வமே
அன்பும் அறமும்
தாழ்ந்து விடாது இனி
கொரோனா கிருமி
வாழ்ந்து விடாது