கனடாவில் சிக்கிய மகன் குறித்து கவலைப்படவில்லை; சஞ்சய் பாதுகாப்பாக உள்ளார்: விஜய் தரப்பில் விளக்கம்

கனடாவில் சிக்கிய மகன் குறித்து கவலைப்படவில்லை; சஞ்சய் பாதுகாப்பாக உள்ளார்: விஜய் தரப்பில் விளக்கம்
Updated on
1 min read

கரோனா வைரஸ் அச்சத்தால் மகன் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை என்ற வருத்தத்தில் விஜய் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சில நாடுகளில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 14) தான் கரோனா வைரஸ் தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது காணப்பட்டது. படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால் பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். பலரும் கரோனா பாதிப்புக்கு நிவாரண உதவி, விழிப்புணர்வு வீடியோக்கள் என வெளியிட்டு வந்த வேளையில், விஜய் எதுவுமே செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதனிடையே, விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். அவரும் கரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியாவுக்குத் திரும்ப முடியவில்லை என்று விஜய் வேதனையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்த போது, "கனடாவில் சஞ்சய் இருப்பது உண்மைதான். ஆனால், அவருக்கு எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. ரொம்பவே பாதுகாப்பாக இருக்கிறார். விஜய்யும் அவ்வப்போது மகனிடம் பேசி வருகிறார். ஆகையால், விஜய் கவலை என்று வெளியாகியுள்ள செய்திகளில் எல்லாம் உண்மையில்லை" என்று குறிப்பிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in