

சிவகார்த்திகேயனை நான் தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'மெரினா' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். தற்போது பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். தற்போது ’அயலான்' மற்றும் 'டாக்டர்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதனிடையே, சிவகார்த்திகேயனை நான் தான் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். ட்விட்டர் தளத்தில் எப்போதுமே தன்னைப் பற்றி வரும் செய்திகள், வதந்திகள் என அனைத்துக்குமே உடனுக்குடன் பதிலளிப்பவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
இன்று (ஏப்ரல் 12) காலை 'குறள் 786' என்று பெயரிடப்பட்ட ஒரு ட்ரெய்லரை பகிர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணனிடம் "மேடம். இந்த குறும்படத்தை ஏன் இன்னும் வெளியிடவில்லை. எப்போது மேடம் வெளியிடுவீர்கள். காத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். அவர் பகிர்ந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன், அபிநயா, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதில் இயக்குநர் பெயராக லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரும் இடம்பெற்றிருந்தது.
தன்னிடம் கேள்வி எழுப்பியவருக்குப் பதிலளிக்கும் விதமாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இது ஒரு குறும்படம் அல்ல. சிவகார்த்திகேயனுடன் என்னுடைய முதல் படமாக இருந்திருக்க வேண்டியது. அவரை நான்தான் அறிமுகப்படுத்தியிருக்க வேண்டியது. நான் அதை கைவிட்ட பிறகுதான் அவர் 'மெரினா' படத்தில் நடித்தார். 'குறள் 786' படத்தில் அவருக்குச் சிறப்பான கதாபாத்திரம்.
ஆனால் அது இல்லாமலேயே வணிக ரீதியாகச் சிறப்பான முறையில் வெற்றி பெற்றுவிட்டார். கதாநாயகியாக அபிநயா நடிக்கவிருந்தார். அவரோடு பணிபுரிய விரும்பினேன். இன்ஷா அல்லாஹ், இன்னொரு தருணத்தில் 'குறள் 786' எடுக்கப்படலாம்”
இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்