தினசரித் தொழிலாளர்களுக்கு உதவி: புதிய அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ள சின்மயி

தினசரித் தொழிலாளர்களுக்கு உதவி: புதிய அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ள சின்மயி
Updated on
1 min read

தினசரித் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்காக புதிய அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ளார் பாடகி சின்மயி.

கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 800 பேரைத் தாண்டிவிட்டது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை. தினசரித் தொழிலாளர்கள் பலரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்குப் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், திரையுலகப் பிரபலங்கள் உதவி செய்து வருகிறார்கள்.

தற்போது பாடகி சின்மயியும் உதவி செய்ய முன்வந்துள்ளார். இதற்காக ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையில் எடுத்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் சின்மயி கூறியிருப்பதாவது:

"சமூக வலைதளங்களில் பாட்டுப் பாடி அனுப்பவும், பிறந்த நாள் வாழ்த்து அனுப்பவும் என்னிடம் கோரிக்கை வைக்கப்படுகின்றன. அதை நான் செய்தும் வருகிறேன். இதை நான் ஒரு தொண்டுக்காகப் பயன்படுத்தவுள்ளேன்.

தினசரி வருமானத்தை நம்பியுள்ள, தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பட்டியலை உருவாக்கியுள்ளேன். அவர்களுக்குப் பணம் அனுப்புங்கள். அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து எனக்கு அனுப்புங்கள். நான் பாடல் பாடியோ, பிறந்த நாள் வாழ்த்து சொல்லியோ உங்களுக்கு வீடியோ அனுப்புகிறேன்".

இவ்வாறு சின்மயி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in