திரையுலகை விட்டு விலகுகிறாரா? - விக்ரம் தரப்பு விளக்கம்

திரையுலகை விட்டு விலகுகிறாரா? - விக்ரம் தரப்பு விளக்கம்
Updated on
1 min read

திரையுலகை விட்டு விலகுவதாக வெளியான செய்திக்கு விக்ரம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'கோப்ரா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். லலித்குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரோனா அச்சத்தால் இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

'கோப்ரா' தவிர்த்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், 'கோப்ரா' தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ள மற்றொரு படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' படங்களை முடித்துவிட்டு நடிப்பை விட்டு விலக விக்ரம் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின. அதில் தன் மகன் துருவ் விக்ரமின் திரையுலக வாழ்க்கையைக் கவனிக்கவுள்ளார் விக்ரம் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்தச் செய்தியைப் பலரும் பகிர்ந்து வந்தார்கள். இதற்கு விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விக்ரம் தரப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், "இது பொய்யான செய்தி. எப்படி யாரிடமும் உறுதிப்படுத்தாமல் இப்படியொரு செய்தி வெளியிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது போன்ற செய்திகளைப் பதிப்பிக்கும் முன் கேட்கவும்.

'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்' மற்றும் லலித் குமார் தயாரிக்கவுள்ள மற்றொரு படம் உள்ளிட்ட சில படங்களில் விக்ரம் நடிக்கவுள்ளார். மேலும், சில படங்களில் நடிக்கக் கதைகளும் கேட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in