Published : 05 Apr 2020 09:36 PM
Last Updated : 05 Apr 2020 09:36 PM

பிரதமர் மோடியின் வேண்டுகோள்: வீட்டிற்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்திய ரஜினி

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, இரவு 9 மணியளவில் தன் வீட்டிற்கு வெளியே மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார் ரஜினி.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி ஏப்ரல் 3-ம் தேதி காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.

அப்போது, ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் யாருமே இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், இவர்களுடைய ஆதரவு இருக்குமா என்ற கேள்வி எழுந்து வந்தது.

இந்நிலையில் சரியாக 9 மணியளவில் தமிழகம் முழுக்கவே பலரும் பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தனர். மேலும், போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார் ரஜினி. அந்த தருணத்தில் அவரது இல்லம் வழியாகச் சென்றவர்கள் பலரும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x