ஃபகத்துடன் இணைந்து பணிபுரிவேன்: கெளதம் மேனன்

ஃபகத்துடன் இணைந்து பணிபுரிவேன்: கெளதம் மேனன்
Updated on
1 min read

ஃபகத்துடன் இணைந்து பணிபுரிவேன் என்று இயக்குநர் கெளதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், தர்ஷன், ரீத்து வர்மா, நிரஞ்சனா அகத்தியன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் கெளதம் மேனனின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததுள்ளது. தற்போது பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கெளதம் மேனன்.

தனது நடிப்பு பயணம் தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார் கெளதம் மேனன். அதில் ஃபகத் ஃபாசில் மற்றும் துல்கர் இருவருடனும் நடித்துவிட்டீர்கள். அவர்களுக்காகக் கதையை ஏதேனும் யோசித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"ஃபகத்தை சந்திக்கும் முன்னரே நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். படப்பிடிப்பில், அவர் நடிக்க வேண்டிய ஷாட்டுக்கு 20 நிமிடங்களுக்கு முன்பு அவர் நன்றாக உள்வாங்கிக்கொள்வார். எந்த காட்சியாக இருந்தாலும் அமைதியாகவே செல்வார். அந்த மனநிலை மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். உங்களுக்கு அறிவுறுத்தாமல் அவர் அந்த மனநிலைக்கு உங்களை எடுத்துச் செல்வார்.

அவருக்காக ஒரு கதை என்னிடம் இருக்கிறது. கண்டிப்பாக என்னைத் தொடர்புகொள்வதாக அவர் உறுதியளித்துள்ளார். நாங்கள் இணைந்து பணி புரிவோம். அப்படித்தான் அவர் பணியாற்றுகிறார். நான் அவருக்காகக் காத்திருப்பேன்” என்று பதிலளித்துள்ளார் கெளதம் மேனன். தற்போது 'ஜோஷ்வா' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் கெளதம் மேனன். அதை முடித்துவிட்டு 'வேட்டையாடு விளையாடு 2' படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in