

கரோனா வைரஸ் பாதிப்பால் தான் சேதுராமன் மரணமடைந்துவிட்டார் என்ற தகவலுக்கு அவருடைய மருத்துவ நண்பர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சேதுராமன் நேற்றிரவு (மார்ச் 26) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 37. நடிகராக மட்டுமன்றி, தோல் சிகிச்சை மருத்துவராகவும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். இவரது திடீர் மறைவு பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், சிலர் கரோனா வைரஸ் பாதிப்பால் தான் காலமாகிவிட்டார் என்று தகவல்களைப் பரப்பினார்கள். இது தொடர்பாக சேதுராமனின் நெருங்கிய மருத்துவ நண்பரான அஸ்வின் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பதில், "நீ இல்லாமல் என் வாழ்க்கை முன்பு போல இருக்கப்போவதில்லை சேது. இது என் வாழ்வின் மிக வலி மிகுந்த நாள். 30 ஆண்டுக்கால நட்பு, சகோதரத்துவம், உலகத்தையும் இளைஞர்களையும் நாம் பார்த்த பார்வை, இந்த உலகத்துக்கு நாம் நல்லதையும், மகிழ்சியையும் மட்டுமே கொடுக்க முடிவு செய்தோம்.
நீ போகும்போது வெறும் வெற்றிடமாய் இருக்கப்போகும் என்னுடைய ஒரு பகுதியை எடுத்துச் சென்று விட்டாய். மக்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். அவர் மாரடைப்பால் இறந்துள்ளார், கரோனாவால் அல்ல. தயவுசெய்து இந்த நேரத்தில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கும் சேதுராமனுக்கும் உள்ள நட்பு குறித்து அஸ்வின் விஜய் "இதுதான் நாங்கள் எடுத்த கடைசி போட்டோ. இன்னும் நிறைய எடுத்திருக்க வேண்டும். என்னுடைய பிறந்தநாளை நான் மீடியாவிடம் சொன்னது இல்லை. ஆனால் நீ விட்டுச்சென்ற இந்த மார்ச் 26 வலி மிகுந்த நாளாக மாறிவிட்டது.
என்னுடைய பிறந்தநாள் அன்று உன்னுடையதுதான் முதல் அழைப்பு, அதில் 'மச்சான், இந்த வருடம் கரோனா ஊரடங்கால் நான் உனக்காக பிரெட் மட்டும்தான் வாங்குகிறேன்' என்று நகைச்சுவையாகக் கூறினாய். அது தான் உன்னுடைய கடைசி அழைப்பு என்று நான் உணரவில்லை. வரும் ஆண்டுகளின் மார்ச் 26-களை கற்பனை செய்து பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார் அஸ்வின் விஜய்