இது ஊரடங்கு; மக்களை அடிக்குமளவுக்குக்  குற்றமல்ல: வரலட்சுமி சாடல்

இது ஊரடங்கு; மக்களை அடிக்குமளவுக்குக்  குற்றமல்ல: வரலட்சுமி சாடல்
Updated on
1 min read

இது ஊரடங்கு, மக்களை அடிக்குமளவுக்குக் குற்றமல்ல என்று மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரைச் சாடியுள்ளார் வரலட்சுமி

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 843 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் மரணமடைந்துள்ளனர். மக்கள் யாரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், அதையும் மீறி சில பொதுமக்கள் பைக்குகளில் வெளியே வந்தனர். அவர்கள் மீது அந்த ஏரியாவின் காவல்துறையினர் தடியடி நடத்தி, வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தினார்கள். சில மாநிலங்களில் காவல்துறையினர் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இந்த இரண்டு வீடியோக்களுமே கடந்த 2 நாட்களாக ட்விட்டர் தளத்தை ஆக்கிரமித்து வருகின்றன.

காவல்துறையினர் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய வீடியோ குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், "என்ன முட்டாள்தனம் இது. காவல்துறை அவர்கள் உயிரை ஆபத்தில் வைக்கிறார்கள். இப்படியா நீங்கள் அவர்களுக்குக் கைமாறு செய்வீர்கள்? என்ன அபத்தம் இது. இவரைப் போன்றவர்கள் கிருமி தொற்று வரத் தகுதியானவர்கள். கொடூரம். இந்த முட்டாள்களின் சார்பாக நான் அந்த காவல்துறை அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் வெளியே வந்த பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி வீடியோ குறித்து வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில், "இது இப்போது எனக்குக் கிடைத்தது. எப்போதும் ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. காவல்துறையால் மக்களை அடிக்க முடியாது. இது ஒரு ஊரடங்கு. மக்களை அடிக்குமளவுக்குக் குற்றமல்ல. இது கண்டிக்கப்பட வேண்டியது. பதட்டம் அதிகமாக இருப்பதால் அனைவரும் வீட்டிலேயே இருங்கள். இதை இன்னும் மோசமாக்க வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in