மக்கள் ஊரடங்கு vs உயிரியல் பூங்காக்கள்: விலங்குகளுக்கும் இப்படித்தானே இருக்கும்?- நமீதா வருத்தம்

மக்கள் ஊரடங்கு vs உயிரியல் பூங்காக்கள்: விலங்குகளுக்கும் இப்படித்தானே இருக்கும்?- நமீதா வருத்தம்
Updated on
1 min read

ஊரடங்கு உத்தரவையும் உயிரியல் பூங்காக்களையும் ஒப்பிட்டு நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் கரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ நெருங்கியுள்ளது. பலியானவர்கள் 9 பேர்.

கரோனா வைரஸ் பரவலைக் குறைக்க நாடு முழுவதும் 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நகரங்கள் யாவும் வெறிச்சோடி கிடக்கின்றன. தமிழகத்திலும் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடைச் சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீட்டில் இருப்பதையும் விலங்குகளை உயிரியல் பூங்காக்களில் அடைப்பதையும் ஒப்பிட்டு நடிகை நமீதா பதிவிட்டுள்ளார்.

இது குறித்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

''புரிந்து கொள்ளுங்கள். நான் எப்போதும் உயிரியல் பூங்காக்களை ஆதரித்தது கிடையாது. அங்கே செல்வதற்கும் யாரையும் ஊக்குவித்தது கிடையாது. சில நாட்கள் வீட்டில் இருப்பதற்கே நமக்குத் தொய்வாகவும், வெளியே செல்ல ஆசையாகவும் இருக்கிறது. நமது மகிழ்ச்சிக்காக விலங்குகளை அடைத்து வைக்கும்போது அவற்றுக்கும் இப்படித்தானே இருக்கும்?

உங்கள் குழந்தைகளுக்கு விலங்குகளைக் காட்ட விரும்பினால் உங்கள் கணினியிலோ அல்லது சரணாலயத்துக்கு அழைத்துச் சென்றோ காட்டுங்கள். ஆனால் தயவுசெய்து அவற்றை அடைத்து வைப்பதை நிறுத்துங்கள். மன அழுத்தம் மற்றும் சோகத்தால் அவை இறக்கின்றன. நினைவிருக்கட்டும் நாம் அங்கே சென்று டிக்கெட் வாங்குவதால்தான் உயிரியல் பூங்காக்கள் நிரம்பி வழிகின்றன.

நாம் அங்கு செல்வதை நிறுத்தி விட்டால், காட்டுக்குச் சொந்தமான இயற்கையின் படைப்புகளை அடைத்துவைப்பதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள். கடைசியாக ஒன்று சொல்லிக்கொள்கிறேன், விலங்குகள் நம்மோடு வாழ்பவைதான். ஆனால் நமக்காக வாழ்பவை அல்ல''.

இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in