Published : 19 Mar 2020 05:55 PM
Last Updated : 19 Mar 2020 05:55 PM

கரோனா அச்சம்: பயம் வேண்டாம்; பாதுகாப்பு முக்கியம் - ஹிப் ஹாப் தமிழா வேண்டுகோள்

கரோனா அச்சம் தொடர்பாகப் பயம் வேண்டாம். ஆனால் பாதுகாப்பு முக்கியம் என்று ஹிப் ஹாப் தமிழா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழகத்தில் இதுவரை கரோனா வைரஸ் தொற்று 3 பேருக்கு இருப்பதை உறுதி செய்துள்ளது தமிழக அரசு.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது ஹிப் ஹாப் தமிழா தனது யூ டியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

”கரோனா வைரஸ் தொடர்பாக இப்போது உலகம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு சீரியஸானதா என்றால் கண்டிப்பாக ஆமாம். இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்ல உலக அளவில் பொருளாதாரம் அடிவாங்கியுள்ளது. ஆனாலும், 15 நாட்கள் அனைத்தையும் மூடி விடுங்கள் என்று அரசாங்கம் சொல்கிற அளவுக்கு இதில் என்ன பிரச்சினை?

என்ன பிரச்சினை என்றால், இந்த கரோனா வைரஸுக்கு இன்னும் எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படியென்றால் நிலவேம்பு என்று கேட்பீர்கள். நிலவேம்பு குடிநீர் 60 மில்லி தினமும் 2 வேளை 14 நாட்கள் தொடர்ந்து குடித்தீர்கள் என்றால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அனைத்துமே வைரஸ் தாக்குதலைத் தடுப்பது மட்டுமே. இன்னும் எந்தவொரு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்காகப் பயப்பட வேண்டுமே என்றால் இல்லை. ஆனால், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

15 நாட்கள் லீவு, ஜாலியாக வெளியே போகலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் வெளியே போகக் கூடாது என்றுதான் 15 நாட்கள் விடுமுறை விட்டிருக்கிறார்கள். உங்கள் உடல்நிலை நல்லபடியாக இருந்தாலும் வெளியே செல்லும்போது இந்த வைரஸ் உங்களுக்குப் பரவும். அதனைத் தொடர்ந்து நீங்கள் வீட்டுக்கு வந்தவுடன் உங்களுடைய பெற்றோர், குழந்தைகளுக்கும் பரவிவிடும். இந்த வைரஸ் தொற்றுக்கு நீங்களே ஒரு காரணமாக அமையலாம். உங்கள் உயிருக்கே ஆபத்தாகவும் நேரிடலாம்.

கரோனா வைரஸ் தொடர்பாக நிறைய வீடியோக்கள் யூ டியூப் சேனலில் காண முடிகிறது. முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அதிகாரபூர்வ தகவல்கள் WHO இணையத்தில் இருக்கும். அதிலிருந்து பாருங்கள். இரவு - பகல் பாராமல் கரோனா தொற்றைத் தடுக்க உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஒரு சல்யூட்”.

இவ்வாறு ஹிப் ஹாப் தமிழா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x