

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகப் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது ஒய் நாட் ஸ்டுடியோஸ்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தமிழக அரசு உத்தரவால் படத்தின் பணிகள், படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் கல்விக்கூடங்கள், திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது 'ஜகமே தந்திரம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோஸ், அலுவலகப் பணிகள் தொடங்கி அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தங்களுடைய ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சூழல் சீராகும் வரை இதே நிலை தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் 'ஜகமே தந்திரம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதே முடிவைத்தான் ட்ரீம் வாரியர் மற்றும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனமும் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.