

ரஜினியின் பேச்சு குறித்து நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் (மார்ச் 12) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. தனது அரசியல் பார்வை, அரசியல் வருகை, அரசியல் மாற்றுத்துக்காக வைத்துள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.
ரஜினியின் இந்தப் பேச்சை வைத்து சமூக வலைதளத்தில் கிண்டல் பதிவுகள் வெளியாகத் தொடங்கின. அதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். மேலும், சில அரசியல் கட்சித் தலைவர்கள் கூட 'ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்' என்று தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் ரஜினியின் பேச்சுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே ரஜினியின் பேச்சு குறித்து லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை' என்ற பெயரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொல் புதிது!
சோதி மிக்க நவகவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
"கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது"
"என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!"
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது!
இதைப் புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரைத் திட்டுபவர்கள் கூட,
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள்!
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதைப் புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமானுக்கு நன்றி!
நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந்தின் எண்ணங்கள் நிறைவேற, நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!''
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.