

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நடிக்க துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
'பரியேறும் பெருமாள்' படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'கர்ணன்' படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காட்சிப்படுத்தியுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்தப் படத்தை தாணு தயாரித்து வருகிறார்.
90% படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் பணிகளை முடித்து ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் 'கர்ணன்' படம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
'கர்ணன்' படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் துருவ் விக்ரமை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டது என்றும், 'கர்ணன்' பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
'ஆதித்ய வர்மா' படத்துக்குப் பிறகு எந்தவொரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார் துருவ் விக்ரம். பல இயக்குநர்கள் கதைகள் கூறினாலும், மாரி செல்வராஜ் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே உடனே ஒப்புக் கொண்டார் என்கிறார்கள்.