கரோனா வைரஸால் தள்ளிப்போகும் வெற்றிமாறன் - சூரி படத்தின் ஷூட்டிங் 

கரோனா வைரஸால் தள்ளிப்போகும் வெற்றிமாறன் - சூரி படத்தின் ஷூட்டிங் 
Updated on
1 min read

சர்வதேச அளவில் பல இடங்களில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) நோய் தாக்குதல் இருப்பதால், வெற்றிமாறனின் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்க உள்ள புதிய படத்தின் புகைப்பட ஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்தது. மீரான் மைதீன் எழுதிய அஜ்னபி என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.

இந்தியாவில் இருந்து அரபு நாடுகளில் பிழைப்புக்காக போகிற இஸ்லாமியச் சமூகத்தைச் சார்ந்த எளிய மனிதர்களின் உணர்வுபூர்வமான ஆவணமாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் சுழலும் இப்புத்தகத்தை திரைக்கதையாக்கியுள்ள இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தினை ஓமன், கத்தார், சவுதி ஆகிய இடங்களில் படமாக்க உள்ளார்.

படத்தில் சூரி உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மட்டுமே நம் ஊர்க்காரர்களாக நடிக்க உள்ளனர். மற்றபடி பல கதாபாத்திரங்களில் வெளிநாட்டவர்கள் நடிக்கும் வண்ணம் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் வெற்றிமாறன் அமைத்துள்ளார்.

தற்போது புகைப்பட ஷூட் நடந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருந்தது. சர்வதேச அளவில் பல இடங்களில் கோவிட் -19 (கரோனா வைரஸ்) நோய் தாக்குதல் இருப்பதால், படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பினைத் தள்ளி வைத்துள்ளனர். நிலைமை சீரானதும் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in