

அரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டம் தனக்கு நன்கு தெரியும் என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் எழுதிய 'கிறுக்கல்கள்' கவிதை தொகுப்பு மற்றும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' திரைப்படத்தின் நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிசி புத்தகக் கடையில் நேற்று (பிப்.27) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பார்த்திபன் பேசியதாவது:
"சினிமா என்பது பெரிய போராட்டம், இந்த போராட்டங்களை கடந்து தான் ஒவ்வொரு படமும் வெளிவருகிறது. 'தெய்வ மகன்' முதல் 'தேவர் மகன்' வரை தேசிய விருதுக்குச் சென்ற நிலையில், என்னுடைய 'ஒத்த செருப்பு' திரைப்படத்திற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காததால் தான், நானே 50 லட்சம் ரூபாய் செலவு செய்து ஆஸ்கருக்கு அனுப்பினேன்.
தற்போது, 'இரவின் நிழல்', 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். என்னுடைய 'ஒத்த செருப்பு' படத்திற்கு அரசு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை.
அடுத்ததாக 'சிங்கில் ஷாட்'டில் படம் ஒன்றை எடுக்க உள்ளேன். நேசிப்பும் காதலும் தான் படம்.
அரசியலால் ரஜினி, கமல் படும் கஷ்டம் எனக்கு நன்கு தெரியும். சினிமாவில் சாதித்த பின் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளது"
இவ்வாறு பார்த்திபன் பேசினார்.