Published : 20 Feb 2020 11:16 AM
Last Updated : 20 Feb 2020 11:16 AM

’இந்தியன் 2’ படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் பலி; திரையுலக பிரபலங்கள் இரங்கல்

'இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகி இருப்பதற்கு, திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

'இந்தியன் 2' படத்துக்கான சண்டைக்காட்சிகள் படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டது. நேற்றிரவு (பிப்ரவரி 19) நடந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, கலை உதவி இயக்குநர் மது மற்றும் தயாரிப்பில் உதவியாக இருந்த சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தால் ஷங்கர், கமல் உள்ளிட்ட ஒட்டுமொத்த 'இந்தியன் 2' படக்குழுவுமே அதிர்ச்சியில் இருக்கிறது. இந்தப் படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு, பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் படக்குழுவினருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அவற்றில் சில பதிவுகள்:

ஆர்யா: இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். மனமுடைந்துவிட்டது. அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து: இதைக் கேட்டு மனமுடைந்துவிட்டேன். தங்கள் அன்பார்ந்தவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.

வரலட்சுமி சரத்குமார்: இறப்பு இயற்கையானது. ஆனால் எதிர்பாராத இறப்பு நிகழும்போது அது இதயத்தை நொறுக்குகிறது, வெறுப்பைத் தருகிறது. அந்தக் குடும்பங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் இழப்புகளை அனுபவித்திருப்போம். 'இந்தியன் 2' விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என் அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

இயக்குநர் வெங்கடேஷ்: 'இந்தியன் 2' படப்பிடிப்பின்போது மரணமடைந்தவர்களுக்கு இதய அஞ்சலி. காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெறவும் வேண்டுகிறேன்.

அம்ரிதா: இது மிகவும் வருத்தமடையச்செய்கிறது. அந்த இடம் பயங்கரமாக இருக்கிறது. இதே மாதிரியான விளக்கு தான் 'பிகில்' படப்பிடிப்பிலும் ஒருவர் மீது விழுந்தது. நாங்கள் அனைவரும் இதைப் போன்றே நொறுங்கிவிட்டோம். இனி யாரும் அங்கு படப்பிடிப்புக்குச் செல்லக்கூடாது அல்லது வெறுமனே கூட செல்லக்கூடாது என விரும்புகிறேன். அங்கு நிறைய எதிர்மறையான விஷயங்களை உணரமுடியும்.

பிரசன்னா: விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த செய்தியோடு இந்தக் காலையை வருத்தத்துடன் கண் விழித்தேன். 'இந்தியன் 2' படப்பிடிப்பிலும், கே.எஸ்.ஆர்.டி.சி. விபத்திலும் உயிரிழந்தவர்களுக்கு என் பிரார்த்தனைகள். தங்களது அன்பார்ந்தவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

எடிட்டர் சாபு ஜோசப்: மனதை உடைக்கும், அதிர்ச்சியான விபத்து இது. தங்களது அன்பார்ந்தவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். காயமுற்றவர்கள் விரைவில் குணமடைய என் பிரார்த்திக்கிறேன்.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x