

சமீபத்தில் வெளியான தனது பாடல்களின் ரீமிக்ஸ் வடிவங்கள் எரிச்சலைத் தருவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். தனியார் நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதைக் கூறியுள்ளார்.
தனது பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், ''கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ஓகே ஜானு’ படத்தில் இடம் பெற்ற ‘ஹம்மா ஹம்மா’ பாடல் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதன் பிறகு ரீமேக் செய்யப்பட்ட எந்தப் பாடலும் எனக்குப் பிடிக்கவில்லை. அவற்றில் சில பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருந்தன.
அந்த ரீமேக் பாடலை உருவாக்கிய நிறுவனத்தை அழைத்து, “இதற்கு ஆதரவு தெரிவிக்கச் சொல்லி நீங்கள் என்னை வற்புறுத்துகிறீர்கள். ஆனால், இந்தப் பாடலை நான் வெறுக்கிறேன். இதை நான் ஆதரித்தால் மக்கள் என்னைக் கிண்டல் செய்வார்கள். ரீமிக்ஸ் ட்ரெண்ட் இப்போது முடிந்து விட்டது என்று கூறினேன்'' என்றார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘அயலான்’ மற்றும் மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.