Published : 20 Jan 2020 08:55 PM
Last Updated : 20 Jan 2020 08:55 PM
மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டி இயக்குநர் அமீர் ஆவேசமாகப் பேசினார்.
அசோக் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மாயநதி'. அபி சரவணன், வெண்பா, 'ஆடுகளம்' நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை முகில் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. பவதாரிணி இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 20) சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் படக்குழுவினரோடு இசையமைப்பாளர் யுவன், இயக்குநர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
தமிழ்த் திரையுலகம் தொடர்பாகத் தமிழக அரசின் நிலைப்பாடுகள் மாற்றம் குறித்துப் பேசினார் அமீர்.
அமீர் பேசியதாவது:
"தமிழ் சினிமாவில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் சினிமாதான் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமா மட்டும் முன்னேறவே இல்லை. பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம் என்னவென்றால் இங்கு எது பலமோ, அது தான் பலவீனமாகவும் இருக்கிறது. எம்.ஜி.ஆர் எப்படி திரைத்துறையிலிருந்து வந்து முதல்வர் ஆனாரோ, அவரைத் தொடர்ந்து பலரும் எம்.ஜி.ஆராக போராடிக் கொண்டே இருக்கிறார்கள். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் ஆட்சி செய்தார்கள்.
கலைஞரின் ஆட்சியில் திரையுலகினர் பலரும் பிரச்சினையைச் சொல்லும் போது கேட்டார்கள். எம்.ஜி.ஆர், கலைஞர் ஆட்சியில் இருவருக்கும் நெருக்கமானவர்கள் யாருமே திரைத்துறை சார்ந்த பிரச்சினையை அவர்களிடம் சொல்லவே இல்லை. தங்களை வளர்த்துக் கொண்டார்களே தவிர, துறை சார்ந்த பிரச்சினையைச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் ஹாலிவுட்டிற்கு இணையாகத் தமிழ் சினிமா உருவாகியிருக்கும். அந்தச் சிந்தனையுடன் இருந்த முதல்வர்கள் அவர்கள்.
திமுகவின் ஆட்சியில் தான் ஃபிலிம் சிட்டி உருவாக்கப்படுகிறது. அவர் நினைத்தால் யாருடைய பெயரை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் பெயரைத்தான் வைத்தார். அதைப் பெருமையாகத் தமிழ்த் திரையுலகம் ஏற்றுக் கொண்டது. திமுக ஆட்சி முடிவுக்கு வந்து, அதிமுக ஆட்சி வந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முதல் வேலையாக, எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டி என்ற பெயரை ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி என மாற்றினார்.
இது மிகப்பெரிய தவறு. அப்படிச் செய்திருக்கக் கூடாது. அப்போது திரையுலகினர் முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்திருக்க வேண்டும். ஆனால், செய்யவில்லை. இங்கு ஒருவர் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களைப் பாராட்டி விழா எடுக்க வேண்டும். அல்லது கை கட்டி அடிமையாக நிற்க வேண்டும். இதுதான் இங்கிருக்கும் சிக்கல். மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் பாதியை டைட்டில் பார்க்குக்கு கொடுத்து விட்டார். இன்று அவ்வளவு சிறிதாக இருக்கிறது அந்த ஃபிலிம் சிட்டி.
'பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா' என்று திமுக ஆட்சியில் ஒரு விழா எடுத்தார்கள். நம்ம ஆட்கள் பாசம் காட்டுவதில் சளைத்தவர்கள் அல்ல. பலன் கிடைக்கிறது என்றால் சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்துவிடுவார்கள். பழைய விஷயங்களை மறந்து சினிமா தொழிலாளர்களுக்கு 100 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தார். சிட்கோ மூலம் லோன் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்போது உணர்ச்சிவசப்பட்டு ஒருவர் மேடையில் அதற்கு 'கலைஞர் நகர்' என்று பெயர் வைக்க வேண்டும் என்றார். அப்போதே இது நடக்காது என்று முடிவு பண்ணிவிட்டேன். அடுத்த அதிமுக ஆட்சி வந்தவுடன் சிட்கோ லோன் தர இயலாது என்று முடித்துவிட்டார். இன்று வரைக்கும் அந்த இடம் சும்மா கிடக்கிறது.
இங்கு அடுத்ததாக இரண்டு பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் எனும்போது, தமிழக அரசு எப்படி விருது கொடுக்கும் உங்களுக்கு. அது அச்சப்படும் அல்லவா? விருது, இடம் என அனைத்தும் கொடுப்போம். ஆனால் கடைசியில் நமக்குப் போட்டியாகக் கட்சி தொடங்குவார்கள் என நினைக்கும். இந்த அச்சத்தின் காரணமாகவே தமிழக அரசு விலகியே நிற்பதாகப் பார்க்கிறேன். ஆனால், இன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்படி அச்சப்பட வேண்டியதில்லை என நினைக்கிறேன். அவர் எந்த பால் போட்டாலும் அடிக்கிறார். அதனால் பயப்படமாட்டார்.
இதுவரை உங்களைப் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீண்ட நாட்களாகக் கொடுக்கப்படாமல் இருக்கும் தமிழக அரசு விருதுகளைக் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு அமீர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT