நாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்: அமலா பால்

நாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்: அமலா பால்
Updated on
1 min read

நாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் என்று 'அதோ அந்த பறவை போல' பத்திரிகையாளர் சந்திப்பில் அமலா பால் தெரிவித்துள்ளார்.

'ஆடை' படத்துக்குப் பிறகு அமலா பால் நடிப்பில் அடுத்து வரவுள்ள படம் 'அதோ அந்த பறவை போல'. முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குநர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதையை அருண் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் எஸ்.வி.சேகர், இயக்குநர் திருமலை உள்ளிட்ட திரையுலகினருக்கும் கலந்து கொண்டார்கள். இந்தச் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் மத்தியில் அமலா பால் பேசும் போது, "இந்த படம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளருக்குக் கண்டிப்பா நல்ல லாபத்தை கொடுக்கும். காரணம் படத்தின் கதை.

ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளாக காட்டில் சிக்கிக் கொண்டப் பிறகு அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறாள் என்பது தான் படம். இன்றைக்கு நாடு இருக்கின்ற நிலையில பெண்கள் பாதுகாப்பு என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தான் பெரிய விவாதமாக இருக்கிறது. இந்தச் சூழலில் இப்படியொரு படம் வருவதில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இது இருக்கும்.

இந்தப் படத்துக்காகப் புதிதாக 'கிராமகா' என்ற தற்காப்பு கலையை கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கூட ஒரு சண்டை போட்டுள்ளேன். அது கண்டிப்பாகப் பெரிதாகப் பேசப்படும். கதாசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்தக் கதையை எழுதியிருக்கிறார். படப்பிடிப்புக்குச் செல்வதுக்கு முன்னால் எனக்கான சண்டைக் காட்சிகளை ஷுட் பன்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை அளித்தார்கள்.

இயக்குநர் வினோத், நிர்வாக தயாரிப்பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டம் முன்னால் படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ஒரு நாயகி காட்டுக்குள் சண்டைக் காட்சிகள் பண்ணினால் எப்படியிருக்கும் என்ற ஒரு பேச்சு இருந்தது. ஆனால் கதை அதைச் சரி செய்துவிடும்.

சிறுவன் பிரவீன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான். நிச்சயமாக அவனுக்குத் தேசிய விருது கிடைக்கும். மேலும் இந்த படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னோடு நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்துக்காக கற்றுக் கொண்ட தற்காப்புக் கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்பவே தைரியத்தைக் கொடுத்துள்ளது. கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். நாயகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார் அமலா பால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in