Published : 18 Jan 2020 10:42 AM
Last Updated : 18 Jan 2020 10:42 AM

ரஜினி இலங்கை வருவதில் தடையில்லை; நிச்சயம் வரலாம்: ராஜபக்சவின் மகன் தகவல்

ரஜினி இலங்கை வருவதில் தடையில்லை; நிச்சயம் வரலாம் என்று ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சென்னையில் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். அப்போது, அரசியல், சினிமா குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும், இலங்கை யாழ்ப்பாணத்துக்கு வருமாறும், அங்கு உள்ள தமிழ் மக்களைச் சந்திக்குமாறும் ரஜினிக்கு விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, ரஜினி இலங்கை செல்ல திட்டமிட்டதாகவும், அவருக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தத் தகவலை இலங்கை அரசும், ரஜினி தரப்பும் மறுத்தன.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச தனது ட்விட்டர் பதிவில், "நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x