Published : 07 Jan 2020 09:18 AM
Last Updated : 07 Jan 2020 09:18 AM

'பொன்னியின் செல்வன்' படத்தில் வைரமுத்து இடம்பெறுவாரா என்பதை மணிரத்னம் முடிவு செய்வார்: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வைரமுத்து இடம்பெறுகிறாரா என்பதை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம்தான் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக படக்குழுவினருடன் அவர் கலந்து பேச வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ‘தா ஃப்யூச்சர்ஸ்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த கலை அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஒய்.எம் ஸ்டுடியோவில் நடந்தது. இதில் அவர்கூறியதாவது:

புதிய கலை அமைப்பு தமிழகத்தின் கலாச்சார விஷயங்களை இளம் தலைமுறைக்கு கொண்டுசெல்லும் விதமாக ‘தா ஃப்யூச்சர்ஸ்’ கலை அமைப்பை உருவாக்கி உள்ளோம். இந்த கால குழந்தைகள் யூ-டியூப் வழியே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அந்த அறிவோடு நம் கலாச்சாரம், நற்பண்புகளையும் அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

அதை முன்னெடுக்கும் முயற்சியாக எம்ஐடி கல்லூரி, இயக்குநர் பரத்பாலாவுடன் இணைந்து இப்பணியில் ஈடுபட உள்ளோம். சமூக வலைதளம் வழியாக மேலும் பலரும் இதில் ஒன்றிணையலாம். போர்க்கால சூழல் இன்றைக்கு உலக அளவில் ஒரு போர்க்கால சூழல் போல, எதிர்மறையான எண்ணங்கள் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன. அதை இளம் தலைமுறையினரிடம் சேர விடாமல் தடுக்கும் ஒருவிதையாக இந்த அமைப்பை நினைக்கிறோம். இசை உள்ளிட்ட கலை வடிவங்கள் வழியாக இதை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

இப்போது பாடல் வரிகள் புரிவதில்லை என்ற கருத்து உள்ளது. நல்ல பாடல்கள் இப்போதும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. சில நேரம், நடனம் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவதற்காக சில பாடல்கள் உருவாகலாம். அது போன்ற பாடல்களில் வரிகளை விட நடனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அரசியல் நிலைப்பாடுகளில் கலைஞர்கள் எப்போதும் கருத்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

கலந்து பேசி ஆலோசனை

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து இடம்பெறுகிறாரா என்பதை அப்படத்தின் இயக்குநர் மணிரத்னம்தான் உறுதிசெய்ய வேண்டும். வைரமுத்து பணியாற்றுவது குறித்து படக்குழுவினருடன் கலந்து பேசி ஆலோசனை செய்ய வேண்டும். இவ்வாறு ரஹ்மான் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x