Published : 06 Jan 2020 04:19 PM
Last Updated : 06 Jan 2020 04:19 PM

முதன்முதலாக வீட்டில் இசையமைத்த இளையராஜா

சுமார் 45 வருட கால சினிமா வாழ்க்கையில், ஒரு படத்துக்கு முதன்முதலாகத் தன்னுடைய வீட்டிலேயே பின்னணி இசை அமைத்துள்ளார் இளையராஜா.

1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். 45 வருடத்துக்கும் மேல் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் சாதனை படைத்துவரும் இளையராஜா, இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

கொஞ்ச காலம் ஏவிஎம் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்த இளையராஜா, பின்னர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு தன் இசைக்கூடத்தை இடம் மாற்றிக் கொண்டார். பல வருடங்களாக அங்குதான் இசையமைத்து வந்தார்.

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட, இளையராஜாவின் இசைக்கூடத்தை இடம் மாற்றிக் கொள்ளச் சொல்லிவிட்டது ஸ்டுடியோ நிர்வாகம். இந்தப் பிரச்சினை இன்னும் தீராமல் இழுத்துக்கொண்டே போகிறது.

இந்நிலையில், ‘தமிழரசன்’ படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை, தன்னுடைய வீட்டிலேயே மேற்கொண்டுள்ளார் இளையராஜா. அனைத்து வாத்தியக் கலைஞர்களையும் வீட்டுக்கு வரவழைத்து, லைவ்வாக பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளைச் செய்து முடித்துள்ளார்.

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில், தன்னுடைய வீட்டில் ஒரு படத்துக்கு பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை இளையராஜா செய்தது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள ‘தமிழரசன்’ படத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, இயக்குநர் மோகன் ராஜா மகன் ப்ரணவ் ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் எஸ்.பி.பி., ஜேசுதாஸ் இருவரும் தலா ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x