

இனி ரஜினி அனுமதியின்றி அவரது நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
'தர்பார்' இசை வெளியீட்டு விழா மற்றும் சென்னையில் நடைபெற்ற ரஜினி பிறந்த நாள் விழா ஆகியவற்றில் லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. 'தர்பார்' இசை வெளியீட்டு விழாவில் பேசியது தொடர்பாக, கமலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால், இரண்டு விழாக்களிலுமே சீமானை மறைமுகமாகக் கடுமையாகச் சாடினார்.
ரஜினி பேசச் சொல்லித்தான் பேசுகிறார் என்று பலரும் கருத்து தெரிவிக்கவே, இதற்கு விளக்கமளித்துள்ளார் லாரன்ஸ். அதில், "என்னுடைய பேச்சும், நான் பதிவிடும் ட்வீட்களும், இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்களும் முழுக்க முழுக்க என்னுடைய சுயசிந்தனைகளே. எதற்கும் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி பொறுப்பு கிடையாது. இப்படியெல்லாம் பேசச் சொல்லி அவர்தான் எனக்கு கற்றுக் கொடுக்கிறார் எனப் பலர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. அவருக்குப் பேச விருப்பமிருந்தால் அதை நிச்சயம் அவரே பேசுவார். தனது செல்வாக்கை ஒருவரிடம் செலுத்தும் நபரல்ல அவர். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட நான் விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்
இந்நிலையில், ரஜினியின் மேடையை தனக்கான மேடையாக லாரன்ஸ் பயன்படுத்திக் கொண்டார் என ரஜினி ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில், "நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்... ஒரு சிறிய விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இனிமேல் தலைவரின் அனுமதியின்றி அவரது எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன். இதற்குப் பின்னால் நான் பகிர்ந்து கொள்ளவிரும்பாத பல காரணங்கள் உள்ளன. எனக்கு அவரது ஆசிர்வாதம்தான் மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.