

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீமன் மற்றும் விஸ்வாந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
'தர்பார்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தை சிவா இயக்கி வருகிறார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஸ்ரீமன் மற்றும் விஸ்வாந்த் ஆகியோரும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
ரஜினியின் முந்தைய படமான 'தர்பார்' படத்தில் ஸ்ரீமன் நடித்துள்ளார். மேலும், 'கபாலி' படத்தில் ரஜினியுடன் விஸ்வாந்த் நடித்திருந்தார். இருவருமே மீண்டும் ரஜினியுடன் நடிக்கவுள்ளது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும், இன்று (டிசம்பர் 21) முதல் 'தலைவர் 168' படப்பிடிப்பில் குஷ்பு மற்றும் சதீஷ் கலந்து கொண்டனர்.