

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'பட்டாஸ்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் 16-ம் தேதி வெளியீடு என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தின் இந்தியக் காட்சிகள் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை முடித்துவிட்டு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ். தாணு தயாரிக்கவுள்ளார்.
மாரி செல்வராஜ் படத்தை முடித்துவிட்டு, செல்வராகவன் படம் அதனை முடித்துவிட்டு ராம்குமார் படம் என வரிசைப்படுத்தியுள்ளார் தனுஷ். இந்தப் படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு தனுஷ் நடிப்பில் உருவாகும் 44-வது படத்தை தயாரிக்கவுள்ளது சன் பிக்சர்ஸ். இதனை அதிகாரப்பூர்வமாக தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இயக்குநர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே தொடங்கியுள்ளது. 3 படங்களை முடித்துவிட்டுத் தான் இந்தப் படத்துக்கு வரவுள்ளதால், இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.