

மலையாளத்தில் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'சோழா', தமிழில் 'அல்லி' என்னும் பெயரில் வெளியாகிறது.
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களை இயக்கியவர் சனல்குமார் சசிதரன். இவருடைய இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் 'சோழா'. இதில் நிமிஷா, ஜோஜு ஜார்ஜ் மற்றும் அகில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வெனீஸ் திரைப்பட விழா, ஜெனிவா திரைப்பட விழா மற்றும் டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் ஜோஜு ஜார்ஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரே 'சோழா' படத்தைத் தயாரித்தும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். 'சோழா' படத்தைப் பார்த்த கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளராகவும் இணைந்துள்ளார்.
கேரளாவில் நேற்று (டிசம்பர் 6) வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தைத் தமிழில் 'அல்லி' என்னும் பெயரில் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவுள்ளது. இதே போல் வெளிமொழி படங்களைத் தமிழில் சுயாதீன திரைப்படங்களாக வெளியிட 'ஸ்டோன் பென்ச் இண்டி' என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
இந்த நிறுவனம் மூலம் வெளியிடப்படும் முதல் படமாக 'அல்லி' அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் டிசம்பரில் 'அல்லி’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.