'தர்பார்' அப்டேட்: திருநங்கைகளை கவுரவப்படுத்தும் பாடல்

'தர்பார்' அப்டேட்: திருநங்கைகளை கவுரவப்படுத்தும் பாடல்
Updated on
1 min read

ரஜினி நடித்துள்ள 'தர்பார்' படத்தில் திருநங்கைகளைக் கவுரவப்படுத்தி பாடலொன்று இடம் பெற்றுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 7-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

முன்னதாக, படத்தின் பணிகளை முடித்து, ஜனவரி 9-ம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளது படக்குழு. மேலும், இந்தப் படத்தில் திருநங்கைகளைக் கவுரவப்படுத்தி பாடலொன்று இடம் பெற்றுள்ளது. அதில், திருநங்கைகளுடன் நடனமாடியுள்ளார் ரஜினி. அந்தப் பாடல் திருநங்கைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.

விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை ரச்சனா, ப்ரியா மூர்த்தி மற்றும் சந்திரமுகி ஆகிய திருநங்கைப் பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர். முதலில் இந்தப் பாடலை வழக்கமான பாடகர்களை வைத்துப் படமாக்கலாம் என்றுதான் முடிவு செய்தனர். ஆனால், படத்தின் காட்சியோடு ஒன்றாது, திருநங்கைகளையே பாட வைக்கலாம் எனப் பாட வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், ப்ரதீப் பார்பர் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'தர்பார்' பணிகளை ரஜினி முடித்துவிட்டதால், தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in